முறிந்த சிலுவை
ரியாஸ் பீட்டர்
மொழியாக்கம்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
முன்னுரை
தவ்ஹீது கலிமாவை முன்மொழிந்து இஸ்லாமிய சகோதரத்துவத்திற்குள் என்னை ஐக்கியப்
படுத்திக் கொண்ட போது பாசத்தோடும் பிரியத்தோடும் முஸ்லிம் சகோதரர்கள் என்னை அரவணைத்துக் கொண்டதை ஒரு போதும் மறக்க முடியாது. சத்தியத்தைத் தேடி அலைந்த என் கதை “முறிந்த சிலுவை”யை முடிக்குந் தறு வாயில் இன்று நான் அவற்றை நினைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் கிருபையும் முஸ்லிம் சகோதரர்களின் அன்பும் தொடர் வற்புறுத்தலும் மட்டும் இல்லாமலிருந்தால் என்னால் இக்காரியத்தை செய்திருக்கவே இயலாது!.
இஸ்லாமிய நந்நெறியைத் தழுவவைத்து என் மீது அல்லாஹ் புரிந்துள்ள பேரருளை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்தவே இந்த என் கதையை எழுதிக் கொண்டுள்ளேன். முறையற்ற என்னுடைய தத்துப்பித்தென்ற சில சொற்கள் யாருடைய உள்ளத்திலாவது சத்திய மெழுகுவர்த்தியை பற்ற வைக்க உதவிவிடாதா என்ற எதிர்பார்ப்பும் நப்பாசையுமே என்னை எழுதத் தூண்டியன. இஸ்லாமை ஆராய்பவர்கள், புதிதாய் இஸ்லாமைத் தழுவியவர்கள், பிறவி முஸ்லிம்கள் அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தேடல் மற்றும் ஆராய்ச்சியின் பெயர் தான் இஸ்லாம்!. இஸ்லாமைப் புரிந்து தூய்மையான ஒரு முஸ்லிமாக மாற நீங்கள் ஆசைப்பட்டால் நீங்கள் இஸ்லாமைப் பற்றி ஆராய்ச்சி செய்தே தீர வேண்டும். நான் இஸ்லாமைப் படிக்கவும் அதைப்பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்த நாட்களிலிருந்தே தொடர்ந்து டைரி எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். இந்நூலின் பெரும்பாகம் அந்த டைரியிலிருந்தே தொகுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்துங்கள் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. கிறிஸ்துவத்தில் இருந்து இஸ்லாமை நோக்கிய எனது பயணத்தில் எனக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த நண்பர்களுக்கெல்லாம் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகிறேன்.
இஸ்லாமின் சரியான திசையை எனக்குச் சுட்டிக் காட்டிய காரீ ஃகலீலுர் ரஹ்மான் ஜாவீத், திருக்கலிமாவை சொல்லிக் கொடுத்து முறைப்படி என்னை இஸ்லாமில் நுழையச் செய்த ஷேக் ஸனாவுல்லாஹ் ழியா, முறையான இஸ்லாமியப் பயிற்சியை எனக்களித்து, இஸ்லாமியக் கல்வியை எனக்கு வழங்கி தங்கள் அன்பாலும் அரவணைப்பாலும் என்னை திக்குமுக்காட வைத்த ஷேக் அபுதாவுது ஷாகிர், ஷைக் துல்ஃபிகார் தாஹிர், வழிகாட்டியாக இருந்து பேருதவி புரிந்த பேராசிரியர் ஷைக் அப்துல்லாஹ் நாசர் ரஹ்மானி என் உற்ற தோழரான சகோதரர் என்ஜினீயர் ஜாவித் மற்றும் ஷேக் இப்றாஹீம் – போன்றோர்க்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இந்நூலைத் தொகுப்பதில் எனக்கு உறுதுணையாய் இருந்த சகோதரர் கவிஞர் டாக்டர் ஜாவீத் இக்பால், சொல் அமைப்பைச் சீர்படுத்தி சொல்லாமல் விளக்கங்களை அளித்த சகோதரர் ஸமீவுல்லாஹ் ஸமீஃ, இந்நூலைப் பதிப்பிக்கும் ஷஹாதத் பதிப்பகச் சகோதரர்கள் ஷாகிர் இப்னு அப்துல்லாஹ் மற்றும் காலித் ஸயால் ஆகியோர்க்கும் நன்றிகள் பலப்பல!!
இவர்களைத் தவிர எனக்கு உதவி புரிந்துள்ள பற்பல சகோதரர்களுக்கும் நான் நன்றி செலுத்து
கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு நல்லபலனை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். (ஆமீன்)
வாசகர்கள் இந்நுாலில் ஏதும் தவறுகள், பிழைகள் இருக்கக் கண்டால் தவறாது அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்ள உதவியாய் இருக்கும். அத்தோடு இந்த நூலை அதிகமான மக்கள் படித்துப் பயன்பெறவும் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய துஆக்களில் என்னையும் நினைவில் கொள்ளுங்கள். எனக்கு இஸ்திக்காமத்தையும், (கொள்கை உறுதியையும்) நேர்வழியையும் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்களுடைய சகோதரன்
அப்துல்லாஹ்
கொஞ்சம் என்னைப் பற்றி……
ஒரு வைதீகக் குடும்பத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் நாள் நான் பிறந்தேன். ரியாஸ் பீட்டர் என்ற பெயரை விரும்பித் தேர்ந்தெடுத்து எனக்கு என் தந்தை சூட்டினார். என்னுடைய தாத்தா பாகிஸ்தான் பைபிள் சொஸைட்டியின் பொதுச் செயலாளராக இருந்தவர். கிறிஸ்துவ மதத்தின் ஓர் உயர் பதவியில் என் தந்தை இருக்கிறார். என் தாயும் கிறிஸ்துவப் பிரச்சார மெஷினரியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். என்னுடைய சித்தப்பாவும் சர்ச்சில் பாதிரியாக உள்ளார். என்னுடைய தந்தைக்கு மாணவப் பருவத்திலேயே கல்யாணம் ஆகிவிட்டிருந்தது. கல்யாணத்துக்குப் பின்புதான் என் தந்தை மதக்கல்வியில் தீவிரக்கவனம் செலுத்திப் படிக்கலானார். கல்வியில் தேர்ந்தபிறது என்னுடைய தாயைவிட்டும் முழுமையாக விலகிவிட்டார். ஏனென்றால், கிறிஸ்துவக் கொள்கைகளின் படி மதப்போதகர்கள், வழிகாட்டிகள் திருமணம் செய்துகொள்வதோ இல்லறவாழ்வில் ஈடுபடுவதோ கூடாது. ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும் அவ்வுறவை அறுத்துக் கொள்ள வேண்டும். மதப்போதகர் என்பவர் கிறிஸ்துவக்கொள்கையின்படி பரிசுத்தமானவர். கடவுள் முன்னிலையில் செய்யப்படும். இக்கணவன் மனைவி உறவோ சுத்தமற்ற உறவாகும்!.
உலகக் கல்வியை நான் புனித பீட்டர் பள்ளியில் கற்றுத் தேர்ந்தேன். மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொள்வதற்காக ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பாடசாலைக்கு அனுப்பப்பட்டேன். அங்கு பாதிரியார் ஆகத் தேவையான மதக்கல்வியை முழுமையாய் கற்றபின் மெஷினரிகளின் பிரச்சாரப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன். அதன் பின்பு, எனக்கு சொந்தமாய் ஈடுபாடு இருந்தாலும் மதத் தேவையைக் கருத்தில் கொண்டும் இசைப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன். புகழ்பெற்ற பெஞ்சமின் விக்டர் அவர்களிடம் ஹார்மோனியம் மற்றும் கீபோர்ட் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். “ரோலிங் ஸ்டோன்” என்ற பெயரில் தனியாக ஓர் இசைக்குழுவையும் ஏற்படுத்தினேன். வழிபாட்டு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுகளில் நடைபெறும் பாடல் நிகழ்ச்சிகளில் இயேசு கிறிஸ்து மீதான ஸ்தோத்திரப் பாடல்களை விரும்பி இசைத்து வரலானேன். உயர்ந்த குருநாதரின் மகன் என்பதால் எனக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதோடு எல்லா வகையான சுதந்திரமும் இருந்து வந்தது. மதுவைக்கூட சர்வ சுதந்திரமாக நான் குடித்து வந்தேன். கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரை மது தூய பானமாகத் தானே கருதப்படுகின்றது?
நான் என் தந்தையை மிகவும் நேசித்து வந்தேன் (இன்னும் அவர் மீது மிகவும் கண்ணியம் வைத்துள்ளேன்) அவரிடம் எப்போதும் உண்மையே பேசுவேன். அவருக்கு முன்பு ஒருமுறை கூட பொய் பேசியதாக எனக்கு ஞாபகமே இல்லை. மதப்பேராயர் முன்பு அப்படிபொய் பேசுவதும் கிறிஸ்தவ மதத்தில் ஏற்புடைய செயல் அல்ல! குற்றங்களை மன்னிக்க வல்ல, தன்னோடு சுவனத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய விடுதலையாளர் அல்லவா? ஒரு வேளை நான் ஏதாவது தவறு செய்துவிட்டாலும் அதை உடனே என் தந்தையிடம் போய் சொல்லிவிடுவேன் “தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவின் மகிமையால் உன் குற்றம் மன்னிக்கப்பட்டது” என்று அவர் கூறுவார். “நீ மதப்பேராயரின் மகன், எனக்குப் பிறகு பேராயராக மாறப் போகின்றவன், என்னைப் போன்றே நீயும் மக்களின் குற்றங்களை மன்னித்து வருவாய்!” என்று மேலும் கூறுவார்.
வழிபாட்டு ஆராதனைக்கு முன்பாக மணியோசை எழுப்புவதையும் வழிபாட்டின் பின்பு துதிப்பாடல்கள் இசைப்பதையும் நான் செய்து வந்தேன். மெஷினரிகளின் பயிற்சியை முடித்தபிறகு மெஷினரிப் பணிகளில் தொடர்ந்து முறையாகப் பங்குபெறத் தொடங்கினேன். விளைவாக, கிறிஸ்துவப் பிரச்சாரத்திற்கென பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யலானேன். கிறிஸ்துவ இளைஞர்களிடம் மெஷினரிப் பணிகளின் அவசியம் அத்தியாவசியம் போன்றவற்றை விளக்கிக் கூறி அவர்களை பெருமளவு துாண்டி வந்தேன். நான் ஓர் உணர்ச்சி மிகுந்த பேச்சாளராய் விளங்கினேன். நான் பேசவுள்ள சர்ச்சுகளில் என் பேச்சைக் கேட்பதற்காகவே இளைஞர்கள் பெருமளவு வந்து குவிவர். என்னுடைய பேச்சினாலும் பிரச்சாரத்தினாலும் ஏராளமான இளைஞர்கள் மெஷினரியின் பணிகளில் தங்களை முறையாக இணைத்துக் கொள்ளலாயினர். கிறிஸ்துவ மதம் மட்டும் தான் உலகிலேயே தலைசிறந்த மதம் என்று மற்ற பிரச்சாளர்களைப் போலவே நானும் எண்ணி வந்தேன். நான் மிகவும் பாக்கியம் பெற்றவன். தன்னுடைய மதத்தைப் பரப்பும் புனிதப் பணிக்காகவே தேவகுமாரர் என்னையும் தேர்ந்தெடுத்துள்ளார் – என்றெல்லாம் பெருமிதப்பட்டுக் கொள்வேன்.
என்னுடைய ஆய்வுப் பயணத்தை விளக்கப் போகுமுன் கிறிஸ்துவமதத்தைப் பற்றியும் அதன் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றியும் சற்று விளக்கி எழுதினால் இஸ்லாத்துக்கும் கிறிஸ்துவத்துக்கும்
இடையிலான வேறுபாடு என்ன? என்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்!.
கிறிஸ்து மதம்
இயேசு மதம் என்பதைவிட கிறிஸ்து மதம் என்றே தங்கள் மதத்தை அவர்கள் அழைக்கிறனர். தங்களையும் கிறிஸ்துவர்கள் என்றே அழைத்துக் கொள்கிறனர். உண்மையில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறைத்தூதர் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கொண்டுவந்த வான்மதமாகத் தான் இது இருந்தது. ஆனாலும் இது ஒரு முழுமையான மதமாக இல்லை. இறைத்தூதர் ஈஸா வானுலகிற்கு உயர்த்தப்பட்ட பின்னர் வேதக்காரர்கள் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றங்களை உண்டுப் பண்ணலாயினர். ஒரு கட்டத்தில் எழுபத்தி இரண்டுக்(72)கும் அதிகமான வேறுபட்ட பைபிள்கள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் இருந்து தான் நான்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
பவுல் (சவுல்) என்ற யூதர்தாம் பைபிளை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்தார். திரித்துவம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் தெய்வத் தன்மை கொண்டவர், பாஸ்காத் திருவிழா போன்ற கொள்கைகளை அவரே புகுத்தினார். கிறிஸ்துவம் என்பது இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, அது ஓர் உலகளாவிய மதம் என்கிற கண்ணோட்டத்தையும் இவரே ஏற்படுத்தினார். அதன் பின்பு அதில் ஏற்பட்ட மாற்றங்களும் திரிபுகளும் இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளன!.
கிறிஸ்துவத்தின் பிரிவுகள்
எண்ணற்ற பிரிவுகள் கிறிஸ்துவ மதத்தில் காணப்பட்டாலும் அவற்றுள் மூன்று பிரிவுகள் முக்கியமானவை.
1. ரோமன் கத்தோலிக் – Roman Catholic
2. புரோடஸ்டன்ட் – Protestant
3. ஆர்தோடக்ஸ் – Orthodox
இவற்றுள் மிகப் பெரிய பிரிவான ரோமன் கத்தோலிக்கைச் சேர்ந்தவன் நான். கிறிஸ்துவர்களால் மிகவும் கண்ணியமாகக் கருதப்படும் பிரிவு அது. இம்மூன்றைப் பற்றியும் சுருங்கக் காண்போம்.
1. சோமன் கத்தோலிக் – முக்கடவுட் கொள்கையை (Trinity) – அல்லாஹுத்தஆலா, அல்லாஹ்வின் மகனான ஈஸா (அலை) (நவூதுபில்லாஹ்) மற்றும் ரூஹுல்குத்ஸ் (பரிசுத்த ஆவி) – இப்பிரிவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
2. புரோடஸ்டன்டுகளும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேவகுமாரன் என்றே கருதுகிறனர்.
3. ஆர்த்தோடெக்ஸ் – இப்பிரிவினர் ஈஸாவையே கடவுளாக கருதுகிறனர். அதாவது கடவுள் கர்த்தரே மனித உருவில் அவதரித்தார் என்பது இவர்களின் கொள்கை!.
இவை தவிர, ஈஸா அலைஹிஸ்ஸலாம் சிலுவையில் அறையப்பட்டது, இறுதித் தீர்ப்பு நாள் போன்றன குறித்தும் இப்பிரிவுகளிடையே கொள்கை வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, ஈஸா அலைஹிஸ்ஸலாம் உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் சிலுவையில் அறையப்பட்டுவிட்டார் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் கருதுகிறனர். நம்முடைய பாவங்களுக்காகத் தான் இயேசு நாதர் உயிர் நீத்தார் என்பதால் மறுமையில் கிறிஸ்துவர்களுக்கு கேள்விகணக்கு விசாரணையே கிடையாது என்பது இவர்களது கொள்கை. ஆகையால், சாவதற்கு முன்பு வரை யாரேனும் ஒரு கிறிஸ்துவர் தன்னுடைய பாவங்களை மன்னிப்பு கேட்டு போக்கிக் கொள்ளவில்லையெனில் அவர் கண்டிப்பாக மறுமையில் விசாரிக்கப்படுவார். மார்க்க வழிகாட்டிகளும் மதகுருமார்களும் ஈஸா (அலை)வின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களைக் கொண்டு மன்னிப்பைத் தேடிக் கொள்ளலாம். அதே சமயம், புரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்கள், இயேசு அலைஹிஸ்ஸலாம் வெறும் உடல் அளவில்தாம் சிலுவையில் அறையப் பட்டார் என்று நம்புகிறார்கள். ஆன்ம வடிவில் அவர் இன்றும் உயிரோடு உள்ளார். தம்மைப் பின்பற்றுபவர் களுக்கு வழிகாட்டுவதற்காக அவர்க்ளிடையே ஜீவித்து வருகிறார். இறுதித் தீர்ப்புநாள் ஏற்படும் வரை அவர் இவ்வாறு இருந்து வருவார் என்பது இவர்களுடைய நம்பிக்கை!.
இவை தவிர இப்பிரிவுகளிடையே வேறேதும் பெரிய கருத்து முரண்பாடுகள் இல்லை. பிரச்சார மெஷினரிப்பணிகளைப் பொறுத்த வரை இம்மூன்றும் இணைந்தே செயற்படுகின்றன. கிறிஸ்துவ மதத்தில் மெஷினரிப் பணிகளுக்கு தனிமரியாதையும் சிறப்பும் உண்டு. எல்லா கிறிஸ்துவர்களும் இதில் முடிந்தளவு பங்கு பெறுகிறார்கள். அதனால் பெரும் நன்மை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மதப் பிரச்சாரப் பணிகளுக்காக தமது செல்வத்தை செலவிடுவது கடமை என்று கருதுகிறார்கள். அதற்காக நிதி வழங்குவதை பெரும் பாக்கியம் என்றே எண்ணுகிறார்கள். ஒவ்வொரு கிறிஸ்துவரும் மிஷினரிப் பணிகளுக்காக பணம் திரட்டியே ஆக வேண்டும். தம்முடைய மதத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு கிறிஸ்துவனும் நினைக்கிறான். அவனைப் பொறுத்தவரை அது மிகுந்த நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய காரியம்!
ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் மூன்று முறை ஞானஸ்நானம் செய்தேயாக வேண்டும். புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்தபின் ஐந்து, ஆறு வயதில் முதல் முறையாக ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது. குற்றங்கள் புரியத் தொடங்கும் வாலிபப்பருவத்தில் ஒருமுறை செய்யப்படுகின்றது. எல்லாக் குற்றங்களிலிருந்தும் மன்னிப்பு பெற்ற பின் மரணத்திற்கு முன் ஒரு முறைசெய்யப்படுகின்றது. இவை தவிர ஒரு மனிதன் பெரும் பாவம் ஏதும் செய்து விட்டாலும் மதகுரு அவனுக்கு ஞானஸ்நானம் செய்விக்கிறார். ஞானஸ்நானம் எப்படி செய்விக்கப்படுகின்றது? என்றால், சம்பந்தப்பட்டவரை கடலில் இடுப்பளவு நீரில் நிற்க வைத்து மதகுருவானவர் ஜெபம் செய்தவாறே தன் இருகைகளாலாலும் நீரை அள்ளி, அள்ளி அவர் அவர் தலையில் ஊற்றிக் கொண்டேயிருப்பார். ஒரு வேளை அருகில் கடலே இல்லையென்றால் ஏதேனும் ஒரு நீரோடையில், ஓடுகின்ற நீரில் ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது!.
கன்னியாஸ்திரீகள் (NUNS)
கிறிஸ்துவத்தில் கன்னியாஸ்திரீகளுக்கு சிறப்பிடமும் மிகுந்த கண்ணியமும் உண்டு. மர்யம் அலைஹாஸ்ஸலாம் அவர்களுடைய (கன்னி மேரி) அடையாளமாகத்தான் கன்னியாஸ்திரீகள் பார்க்கப்படுகிறார்கள்!. என்னுடைய அத்தையும் கன்னியாஸ்திரீ தான் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். கிறிஸ்துவக் கண்ணோட்டத்தின் படி கன்னியர் பாவங்களிலிருந்து பரிசுத்தமானவர்கள். கன்னியர் சொர்க்கத்தில் மர்யம்(அலை) அவர்களின் ஊழியைகளாக குடியிருப்பர். எந்தவொரு கன்னியருக்கும் திருமணம் முடித்துக்கொள்ள அனுமதி இல்லை. அவர்களுடைய முழு வாழ்க்கையும் கிறிஸ்துவ மதத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றது. மிகவும் ஆன்மீக நாட்டம் கொண்ட இளம்பெண்களே கன்னியர் ஆக விரும்புகிறனர். இது தவிர, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஓர் ஆணும், பெண்ணும் தவறிழைத்து முறைகேடான உறவின் மூலம் கல்யாணத்திற்கு முன்பே பெண் குழந்தை பிறந்து விட்டால் பாவவிடுதலை வழங்கும் மதகுருவின் அறிவுரையின்படி அப்பெண் குழந்தையும் கன்னியாஸ்திரீ ஆக்கப்பட்டுவிடும். இன்னும் சிலரோ அதிதீவிர மதப்பற்றின் காரணமாக தங்கள் பெண்குழந்தைகளை கன்னியர் ஆக்கிவிடுவதும் உண்டு! இதன் காரணமாக தங்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்று நம்புகிறனர்.
கன்னியர் “பர்தா” அணிவது கடமையாகும். முகம் மட்டுமே வெளித்தெரிய வேண்டும். மற்ற உடல்பகுதிகள் அனைத்தும் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். கையுறைகளையும், பாதங்களை மறைப்பதற்காக காலுறைகளையும் கூட அணிகிறனர். கிறிஸ்துவக் கோட்பாட்டின் படி கன்னியரின் முகம் தவிர்த்த உடலின் வேறு ஏதாவது பகுதி பிறர் பார்வையில் பட்டு விட்டால் அவள் தூய்மை இழந்து விடுகிறாள். ஒரு கன்னியாஸ்த்ரீ இப்படியே தன் முழுவாழ்வையும் கழித்து விடுகிறாள். இருபத்தி நான்கு மணி நேரமும் அவள் கழுத்தில் சிலுலை அழுத்தமாய் விழுந்தே கிடக்கிறது. அலங்காரமும் இல்லை!, அணிகலன்களும் இல்லை!!
இது பெண்ணுக்குச் செய்கின்ற துரோகமில்லையா? என்று என்னையுமறியாமல் நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு!. உலகம் முழுக்க கிறிஸ்துவர்கள் தம்மைத்தாமே மனித உரிமைகளுக்கான பாதுகாவலர்களாக, மனித நேயர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும், கன்னியரைப் பற்றி இத்தகைய சிந்தனை என் மனதில் தோன்றும் போதெல்லாம் என்னை நானே கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வேன். பாவி ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் வலுக்கட்டாயமாக நானே என்னை மௌனப்படுத்திக் கொள்வேன். ஆனாலும் என் உள்ளத்தில் இவ்வுறுத்துதல் இருந்து கொண்டே இருக்கும்!. இவ்வநீதிக்கு எதிரான கலகக் குரல் ஒன்று ஒலித்துக் கொண்டே இருக்கும்!.
பைபிள் (இன்ஜீல்)
கிறிஸ்துவர்களின் வேதம் பைபிள் (இன்ஜீல்) என்றழைக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்து (ஈஸா மஸீஹ்) அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வானிலிருந்து இறங்கியருளிய வேதமறை என்று நம்பப்படுகின்றது. கிறிஸ்துவக் கண்ணோட்டத்தின் படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் சிலுவையில் அறையப்பட்ட பிறகு கிறிஸ்துவத்தை இல்லாமற் செய்யும் எண்ணத்தில் யூதர்கள் பைபிளில் நிறைய மாறு தல்கள் ஏற்பட்டுவிட்டன. கிறிஸ்துவ மதகுருமார்கள் 5 பைபிள்களை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 1. மத்தேயு 2. மாற்கு 3. லுாக்கா 4. யோவான் 5. பர்னபாஸ்
ஆனால், விரைவிலேயே பர்னபாஸின் பைபிள் நீக்கப்பட்டுவிட்டது. அதன் பிரதிகள் எரிக்கப்பட்டுவிட்டன. மற்ற நான்கு பைபிள்களே தக்கவைக்கப்பட்டன. அந்நான்கையும் தொகுத்துத் தான் “புதிய ஏற்பாடு” [New Testament ] உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைபிள்கள் எல்லா கால கட்டங்களிலும் சூழலுக்கேற்ப மாற்றப்பட்டே வந்துள்ளன. அத்தகைய மாற்றங்களின் போது அதற்கு முன்பிருந்த பிரதிகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, அது பழைய நற்செய்தி எனப்படுகின்றது. புதிய நற்செய்தி “புழக்கத்திற்கு” கொண்டுவரப்படுகின்றது. இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும் யூதநூற்களில் இருந்து ஏதேனும் ஒரு செய்தி பைபிள்களில் இடம் பெற்று விட்டது எனக் கருதப்பட்டால் அது உடனே நூற்களிலிருந்து நீக்கப்படுகின்றது. கிறிஸ்துவ நலனுக்கு உகந்த விஷயங்கள் சேர்த்துக் கொள்ளப் படுகின்றன. உலகளாவிய அனைத்து கிறிஸ்துவ குருமார்களின் ஆலோசனைகளைப் பெற்றே இத்தகைய மாற்றங்களை போப்ஜான்பால் மேற்கொள்கிறார். அதன் பின்னர் “பழைய நற்செய்தி” கிறிஸ்துவர்களைப் பொறுத்தவரை “விலக்கிய மரங்களைப்” போன்றாகி விடுகின்றன!. இத்தகைய தொடர் மாற்றங்களினால் பைபிளின் வடிவமே சிதைந்து போனது. ஈர்க்கும் கிறன் அற்றுப்போனது. இப்போது பைபிள் சர்ச்சுகளில் வெறுமனே படிக்கமட்டும் படுகின்றது. நிகழ்ச்சிகளால் நிறைந்த தஸ்தாவேஜ்களின் தொகுப்பாக ஆகிவிட்டது அது!
கிறிஸ்துவ அறிஞர்கள் பலர் இதைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறனர். 1996ல் அமெரிக்கா, கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டரோஸ் பல்கலைக்கழகத்தில் உலகெங்கினும் உள்ள சிறந்த பற்பல அறிஞர்கள் பங்கு பெற்ற கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அவர்கள் ஒன்றுபட்டு தீர்மானித்து அறிவித்தவற்றுள் ஒரு சில˜ புதிய ஏற்பாடு எனும் பெயரில் தற்போது கிறிஸ்துவ உலகில் வழங்கிவருகின்ற நுாலின் பெரும்பகுதி ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, நம்பப்படத் தக்கது அல்ல! இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவனான “யூதாசு” என்பவன் தான் தலைமைக்குருக்கள் மற்றும் மக்களின் மூப்பர்களின் ஆட்களுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுத்து துரோகம் இழைத்தவன் என்று நம்பப்படுகின்றது. புதிய ஏற்பாட்டில் உள்ளது போல இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று இவ்வறிஞர்கள் மறுத்தனர். மத்தேயு, மாற்கு, லுாக்கா, யோவான் போன்ற பிற சீடர்கள் யூதாசுக்கு எதிராக கூறுகின்ற சாட்சிகளை நிராகரித்து இந்நூற்கள் ஏற்கப்படத்தக்கவை அல்ல என்று தீர்மானித்தனர். அவர்களுடைய கருத்தின் படி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, உயிர்த்தெழுதல், நிறைவுகாலப் பொழிவு போன்றவற்றை முன் வைத்து இந்நான்கு பைபிள்களும் நிராகரிக்கப்பட வேண்டும். வெறும் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக யூதாசு தன் தலைவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தான் என்பதையோ, முத்தமிட்டு எதிரிகளுக்கு அவரைக் காட்டிக் கொடுத்தான் என்பதையோ இவ்வறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு கருதுவது இயேசு கிறிஸ்துவை கண்ணியக் குறைவாக கருதுவதற்கு ஒப்பாகும் என்று கூறுகிறனர். 1996ல் இக்கருத்தரங்கிற்குப் பின் வெளிவந்த “ஐந்து பைபிள்கள்” நூலாசிரியரும், யமோதி பல்கலைக்கழகத்தின் “புதிய ஏற்பாடு” ஆய்வாளர் திமோதி ஜான்ஸன் என்பவரும் இந்த பைபிள்களை கடுமையாக விமர்சிக்கிறனர். மரபு வகை பைபிள்களின் உண்மைநிலை என்ற தலைப்பிக் கீழ் “இயேசு கிறிஸ்துவின் இலக்கற்ற தேடல்” என்றொரு நூலை இந்நூலாசிரியர் ஏற்கனவே பதிப்பித்துள்ளார்.
இவ்வனைத்து பைபிள்களிலும் உள்ள அடிப்படையான சட்டங்கள் அனைத்துமே மாறுதலுக்கு ஆளாகி உள்ளன என்று திமோதி ஜான்ஸன் ஆராய்ந்துள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட கிறிஸ்துவர்கள் மத்தேயு, மாற்கு, லுாக்கா மற்றும் யோவான் போன்றோரின் பைபிள்களை ஏற்றுக் கொண்டாலும் இவை இச்சீடர்களால் எழுதப்பட்டவை அல்ல!. மாறாக வழிகெட்ட அவர்களின் மாணவர்களால் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்கிறனர். இதன் காரணமாகத்தான் இந்த நான்குமே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தனித்தனியான வேறுபட்ட உருவத்தை முன்வைக்கின்றன. ஆதலால், முற்போக்கு சிந்தனையாளர்கள் தற்போதைய பைபிள்களில் பவுலடிகளின் திருமுகத்தை மட்டுமே உண்மை வரலாறாகக் காண்கிறனர். இதுதான் “இரவுணவின்” Eucharist போதும் வாசிக்கப்படுகின்றது. ஒரு சாதாரண பாமரக் கிறிஸ்துவன் இதைப்பற்றி பெரிதாக ஆராயவோ அலட்டிக் கொள்ளவோ வேண்டியதில்லை என்பது அவர்களுடைய கருத்து!. உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவானவர் இறந்தோரை உயிர்ப்பித்தாரா? என்று அவன் கேள்வி எழுப்புவதோ அல்லது இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து சந்தேகம் கொள்வதோ கூடாது. எனவே தான், பாதிரியின் துணையின்றி தனியே ஒருவன் பைபிளைப் படிப்பதும் தடை செய்யப்படுகின்றது.
இத்தகைய மாற்றங்களின் காரணமாக தற்போதைய பைபிள்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் வரலாறுகளில் ஒற்றுமையே இல்லை. ஒரு வசனம் இன்னொரு வசனத்தோடு முரண்படுகின்றது. ஒப்பீட்டுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் நாம் இதனைத் தெளிவாக காணலாம். பல்வேறு பைபிள்களும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றி என்ன என்ன கூறியுள்ளன? என்பதை வாசகர்கள் படித்து அறிந்தால் அவற்றில் எந்தளவு முரண் உள்ளது என்பதை நன்கு உணரலாம்.
மத்தேயுவின் பைபிள்
“யாக்கோபின் மகன், மரியாவின் கணவர் யோசேப்பு மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து எனும்
இயேசு” (1 -16)
“இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள் – அவருடைய தாய் மரியாவுக்கும்,
யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் துாய ஆவியினால் கருவுற்றிருந்தார்.”
“அவர் கணவர் யோசேப்பு நேர்மையானவர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க
விரும்பாமல் மறைவாக விலகிவிடத் திட்டமிட்டார்!”.
“அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஆண்டவனின் துாதர் அவருக்குக் கனவில்
தோன்றி, யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்ச
வேண்டாம். ஏனெனில், அவர் கருவுற்றிருப்பது துாய ஆவியால் தான்!”
“அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப்பெயரிடுவீர். ஏனெனில், அவர்
தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பான் என்றார்”. (1 – 18-21)
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்…
….. இறை வாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைந்தது நிறைவேறவே இவை யாவும்
நிகழ்ந்தன!” (1 – 22,23)
மாற்குவின் பைபிள்
“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
“இதோ, என் துாதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்கு வழியை ஆயத்தம்
செய்வார்.பாலை நிலத்தில் குரல் ஒன்று முழுங்குகின்றது. ஆண்டவருக்காக வழியை ஆயத்த
மாக்குங்கள்!” (1 – 1-3)
லுாக்காவின் பைபிள்
26. ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானத்தூதரைக் கடவுள் கலிலோயாவிலுள்ள
நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
27. அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண
ஒப்பந்தமானவள். அவர் பெயர் மரியா(அலை)
28. இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்
கொண்டிருந்தார்.
30. வானத்தூதர் அவரைப்பார்த்து, “மரியா, அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக்
கண்டடைந்துள்ளீர்.
31. இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர், அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
32. அவர் பெரியவராயிருப்பார், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.” (1 – 26-32)
யோவானுடைய பைபிள்
9. “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.
10. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால் தான் உண்டானது.
11. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்
கொள்ளவில்லை.
12. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர்
கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.
13. அவர்கள் இரத்தித்தினாலோ, உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ
பிறந்தவர்கள் அல்ல!”
14. வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள்
கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர், தந்தையின் ஒரே மகன்
என்னும் நிலையில் இம்மாட்சியை பெற்றிருந்தார்.” (1 – 9-14)
இந்நான்கு பைபிள்களையும் படித்துப்பார்த்த பின் “இந்த பைபிள்கள் அனைத்தும் முரண்பாடுகளின் தொகுப்பு!” என்ற முடிவிற்கே நாம் வருகிறோம். ஓரிடத்தில் மரியாவை யோசேப்பின் மனைவி என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னோரிடத்தில் “கன்னி” எனப்படுகின்றது. யோசேப்பை யாக்கோபின் மகன் என்று ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது. மற்றோரிடத்திலோ தாவீதின் மகன் என்று எழுதப்பட்டுள்ளது. ஓரிடத்தில் ஈஸா (அலை)வை தேவகுமாரன் என்று சொல்லப்படுகின்றது எனில் பிறிதோரிடத்தில் தேவன் என்றே அழைக்கப்படுகின்றது. ஒரு சாதாரண வாசகனுக்கும், இதைப்படித்தால் சந்தேகம் வந்துவிடுகின்றது. ஆராய்ச்சி மனப்பான்மை இயல்பாகவே எனக்குள் குடி கொண்டிருந்தது. ஆகையால் கிறிஸ்தவ மதம் பற்றிய இது போன்ற விஷயங்களை மனதுள் குறித்து வைத்துக் கொண்டு “ஏன் இப்படி?”என்று ஆராய்ந்து வரலானேன்.
நிம்மதிக்கான தேடல்
இது போன்ற விஷயங்கள் குறித்து என் தந்தையோடு விவாதம் செய்யத் தொடங்கினேன். ஆனால், பைபிள்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவற்றில் காணப்படும் முரண்பாடுகள் – இவற்றைப் பற்றி நான் பேச்செடுத்தாலே போதும், இவற்றிற்கு தெளிவான பதிலைத் தரமுடியாத என் தந்தை “இவற்றைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசிக்காதே!” என்று என்னைத் தடை செய்து விடுவார்!. “மதத்தைப் பற்றி அளவுக்கு அதிகமாக ஆராய்ச்சி செய்யாதே! பாவியாகி விடுவாய். கிறிஸ்துவ மதத்தை உலகமெங்கினும் பரப்புவது எப்படி? அதிக அதிக மக்களை கிறிஸ்துவர்களாக ஆக்குவது எப்படி? கிறிஸ்துவ மதமே உண்மையான மதம், ஈஸா (அலை) தேவகுமாரர் என்று ஏற்றுக் கொண்டால் தான் வெற்றியையும் சுவனத்தையும் அடைய முடியும் என்று அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது எப்படி? என்பது பற்றியே நீ யோசிக்க வேண்டும்!” என்று எனக்கு அறிவுரை சொல்வார்.
கிருஸ்துவம் பற்றி சிந்தித்து ஆராய்ந்ததில் இப்படிப்பட்ட எத்தனை எத்தனையோ கேள்விகள் மனதில் தோன்றின. ஆனால் அவற்றிற்கான விடைகளை எங்குமே பெற முடியவில்லை. அறிவுஜீவிகள், பாதிரியார்கள் ஏன் பேராயர்களால் கூட அவற்றிற்கு விடையளிக்க முடியவில்லை. இதன் விளைவாக என் உள்மன தாகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. தவிக்கும் தாகம் என் உயிரையே பறித்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. என்னுடைய தந்தையால் என்னை திருப்திப்படுத்த இயலவில்லை. என்னை பாவி என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவார் என்பதால் என்னாலும் அவரோடு தொடர்ந்து விவாதம் செய்ய முடியவில்லை. ஆயினும், எனக்குள் ஆய்வு செய்யும் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்லலாயிற்று. கிறிஸ்துவ மதம் பற்றிய எந்த ஒரு கருத்தைக் கேள்விப் பட்டாலும் அதைத் தொண்டித் துருவி ஆராயத் தொடங்கினேன். நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல எனக்கு எல்லா வகையான சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதி வாய்ப்புகளும் எனக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால், எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லையே என்ற ஓர் உணர்வு அடிக்கடி தோன்றலாயிற்று. ஓர் அமைதியின்மை, ஒரு கலவரம் என்னைப் பற்றிக் கொண்டது!. மன அமைதி இல்லாமல் போனதால் விரக்தியில் ஒரு பெரிய “வெளி”யை உணர்ந்தேன். இரவும் பகலும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏன் இப்படி? எங்கேயிருந்து ஏற்பட்டது இந்த வெளி? பெயர் தெரியா இந்த உறுத்துதல் தோன்றியது எப்படி? இந்த உலக வசதிவாய்ப்புகளால் மனதுக்கு அமைதியை, நிம்மதியைத் தர இயலாது என்றால் எங்கே தான் உள்ளது அந்த நிம்மதி?
கிறிஸ்துவர்களை வழிபாட்டுக்கு அழைக்கும் தேவாலய மணியை அடிப்பது பெரும்பாலும் என்னுடைய பணியாகவே இருந்து வந்தது. மணியடிக்கும் போதெல்லாம் எதிரே உள்ள பள்ளிவாசலில் இருந்து புறப்படும் பாங்கோசை என் காதில் விழும். அர்த்தம் புரியாத போதும் அவ்வோசை மகுடியாய் என்னைக் கட்டுப் படுத்தி விடும். திகைத்துப் போய் நான் மணியடிப்பதைக் கூட மறந்து சில சமயம் அப்படியே நின்று விடுவேன். எனக்குள் உயிர்பெற்று எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்த அப்துல்லாஹ்வின் மனதுக்கு பெரியதொரு நிம்மதியே கிடைத்தது. இனந்தெரியாத ஓர் ஈர்ப்புவிசை தன்பால் என்னை இழுத்துக் கொண்டிருந்தது. பள்ளிவாசலுக்கு வெளிப்புறமாகப் போய் நான் நின்று கொள்வேன். முஸ்லிம்கள் வழிபாடு செய்வதை பார்த்துக் கொண்டே இருப்பேன்.
இதன் காரணமாக அடிக்கடி அப்பாவிடம் திட்டுகளை வாங்க நேரிட்டது. சர்ச்சில் சிலுவைக்கு முன்னால் நின்று கொண்டு, “தேவனே! ஆண்டவரே!! என் மனதிற்கு நிம்மதியைத் தாரும். சத்திய நேர்வழியை எனக்கு காட்டித் தாரும்!” என்று அடிக்கடி மன்றாடிப் பிரார்த்திக்கலானேன்.
ஆண்டவர் என் பிரார்த்தனையை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார். நான் சத்தியத்தையும் நிம்மதியையும் பெற்றுக் கொண்டேன். எப்படி தெரியுமா?
சத்தியத் தேடல்
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. வழிபாட்டுக்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சர்ச்சில் ஈஸா (அலை) மீது ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவதும், வழிபாட்டுக்குப் பிறகு துதிப்பிரார்த்தனைகள் புரிவதும் என்னுடைய பணியாகும். இயேசு கிறிஸ்துவை கடவுளின் மகன் என்று ஏற்றுக் கொண்டுள்ளோர் வழிபாட்டுக்காக சர்ச்சுக்கு வரவேண்டி ஆலயமணியை அடிக்குமாறு என் தந்தை என்னைப் பணித்தார். தன்னுடைய மகனையே வழிகாட்டுவதற்காக அனுப்பி வைத்த புண்ணிய மதமொன்றில் ஆண்டவர் என்னை பிறக்க வைத்திருக்கின்றாரே என்று அப்போதெல்லாம் நான் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்வேன். கழுத்தில் சிலுவையைத் தொங்கவிட்டவாறு நான் சர்ச்சை நோக்கிப் புறப்பட்டேன். விளக்குகளை ஏற்றிவிட்டு மணி அடித்து முடித்தேன். பிறகு சிலுவையின் முன்னால் நின்று கொண்டு பிரார்த்திக்கலானேன். “கிறிஸ்து ஆண்டவரே! தேவகுமாரரே! மக்கள் அனைவரையும் நன்மையின் பால் அழைத்துவாரும், நீரே மனதின் இரகசியங்களை அறியக்கூடியவராக உள்ளீர்!”
கைகளால் சிலுவைக் குறியிட்டவாறு என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன். எதிர்காலத்தில் ஆயர் ஆகக்கூடியவன். விடுதலை பெற்றுத்தரப் போகிறவன் என்பதால் மக்கள் எனக்கு மிகுந்த கண்ணியம் அளிப்பது வழக்கம். மக்கள் என் கரங்களைப் பிடித்து முத்தமிடுவர், நான் அவர்களின் தலையில் கைபதித்து ஆசீர்வதிப்பேன்!.
அனைத்து மக்களும் வந்து குழுமிய பிறகு என் தந்தை சர்ச்சில் நுழைந்தார். மரியாதையாக மக்கள் எழுந்து நின்றனர். ஆயர்களுக்கென்றே உள்ள உயர் இடத்தில் என் தந்தை போய் நின்றார். மக்கள் அனைவரையும் உட்காருமாரும், என்னை பாட்டிசைக்குமாறும் சைகை செய்தார். நான் அன்று சோககீதம் இசைத்தேன். அனைவரும் சோகப் பாடல்களை படித்தனர். ஏனெனில் அன்று ஈஸா (அலை)வை சிலுவையில் அறைந்ததைப் பற்றிய உரை இருந்தது. பின்பு அப்பா உரையாற்றத் தொடங்கினார்.
“யூதர்களின் ஆளுநனான பிலாத்து, இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு கட்டளையிட்டான். அப்போது இயேசுவானவர் மக்களைப் பார்த்துக் கூறினார். “என் ஜனங்களே, உம் குற்றங்களுக்காகத் தான் நான் சிலுவையில் அறையப்படுகிறேன். ஒரு வேளை நான் சிலுவையில் அறையப்படாவிட்டால், உயிர் கொடுக்காவிட்டால் எங்கும் நிறைந்துள்ள எப்போதும் ஜீவித்திருக்கிற ஆண்டவர் உங்களுடைய பாவங்களை மன்னிக்க மாட்டார்!”.
பிறகு ஆயர், மத்தேயு நற்செய்தியிலிருந்து வசனத்தை ஓதினார்.
40. “நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா!” (27-40)
41. அவ்வாறே தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும், மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர்.
42. அவர்கள்,”பிறரை விடுவித்தான். தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்போது நாங்கள் இவனை நம்புவோம்.
43. கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். “நான் இறைமகன் என்றானே!” என்று கூறினார்கள்……
45. நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.
46. மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது “என் இறைவா!, என் இறைவா!, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார்.
47. அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர்…..
49. மற்றவர்களோ, “பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்” என்றார்கள்.
50. இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர் விட்டார். (மத்தேயு 27 – 40-50)
இவ்வசனங்களை வாசித்துக் காட்டிய பிறகு ஆயர் மீண்டும் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். “ஜனங்களே, நம்முடைய பாவங்களுக்காகத் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் விட்டார். நீங்கள் பாவங்களைச் செய்யாதிருங்கள்! அப்படியே செய்துவிட்டாலும் ஆயரின் முன்மண்டியிட்டு உண்மையை சொல்லுங்கள். நீங்கள் செய்த பாவத்தை ஒத்துக் கொள்ளுங்கள். ஆயர் உங்கள் பாவமன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடுவார். ஏனெனில், ஆயர், இயேசு சிறிஸ்துவின் பிரதிநிதி ஆவார். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வாங்கித் தருபவரும் ஆவார், ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்கள் எல்லோருடைய பாவங்களையும் மன்னிப்பாராக, ஆமென்!”
அதன் பின்னர் அனைவரும் சேர்ந்து துதிப்பாடல்களை பாடத் தொடங்கினர். கடைசியில் நான் பிரார்த்தனை செய்வித்தேன். பின்பு அங்கிருந்து தந்தையோடு வீடு திரும்பினேன். என்னுடைய நிம்மதியின்மையையும் மனக்கிலேசத்தையும் அதிகப்படுத்தும் இன்னொரு நாளாக இது அமைந்தது!. நாம் செய்வதெல்லாம் தவறு. சத்தியம், உண்மை வேறெங்கோ உள்ளது என்ற எண்ணம் நிமிடத்துக்கு நிமிடம் என்னுள் வளர்ந்து கொண்டே போனது.
என்னுள் அடிக்கடி தோன்றுகின்ற ஒரு கேள்வி
அது என்னவென்றால், இயேசு கிறிஸ்து உண்மையிலேயே இறைமகன் என்றால் அவர் ஏன் இறந்து போனார்? ஆண்டவர் என்றென்றும் ஜீவித்திருப்பார். உலகப் பொருட்களெல்லாம் அழிந்து போனாலும் அவர் நிலையாக உயிர்த்திருப்பார் என்று நாம் நம்புகின்றோம். அப்படி என்றால் இயேச கிறிஸ்துவும் நிலைத்திருக்க வேண்டும், அல்லவா? உலகின் ஆளுநர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த போது அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆண்டவரும் தம்முடைய மகனைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. ஏன் இப்படி?
என்னுடைய அப்பாவிடம் சென்று இதை நான் கேட்டேன். அவர் பயங்கரமாக ஆவேசப்பட்டார். பிறகு அமைதியான குரலில் கூறினார். “பீட்டர்! பாவமன்னிப்பு தேடிக்கொள். இத்தகைய வழிகெட்ட பேச்சுக்களைப் பேசாதே. புனித பைபிளின் கருத்துக்களை பொய்யாக நினைக்காதே. ஆண்டவர் இயேசு கிறிஸ்து உன்னை வழிகேட்டிலிருந்து இரட்சிக்க வேண்டும். நேர்வழியில் நடத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன். இன்றே நீ ஞானஸ்நானம் செய்து கொள்! இனிமேற்பட்டு இது போன்று என் முன்னால் வந்து நின்று உளறாதே!
நான் யோசிக்கின்ற முறையே தவறோ என்று தந்தையின் பேச்சைக் கேட்டபின் சிந்திக்கலானேன். புனித பைபிளின் பக்கம் மீண்டும் என் கவனத்தைத் திருப்பினேன்.
புனித பைபிளின் வழிகாட்டுதல்
மனதில் தடுமாற்றம், நிம்மதியற்ற நிலையோடு புனித பைபிளை வாசிக்க ஆரம்பித்தேன். யோவான் பைபிளின் ஒரு வசனம் என் பார்வையில் பட்டது.
“தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் துாய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். “ (15-26)
“நான் உன்னிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.“ (16-7)
“நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க முடியாது.“ (16-12)
“உண்மையை வெளிப்படுத்தும் துாய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார். தாம் கேட்பதையே பேசுவார். வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.“ (15-13)
இந்த வசனங்களை படித்ததும் நான் நேராக என் அப்பாவிடம் சென்றேன். “நான் போயே ஆக வேண்டும். நான் போனால் தான் துணையாளர் வருவார். அவர் சத்தியத்தின் பக்கம் உங்களுக்கு வழிகாட்டுவார் “ என்றெல்லாம் புனித பைபிளில் இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரே? இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு அவர் குறிப்பிட்டுள்ளது போல இன்று வரை யாராவது வந்துள்ளாரா? என்று கேட்டேன்.
“இல்லை! இன்ற வரை அப்படி யாரும் வரவில்லை. ஆனால், அரபுப் பாலைவனத்தில் ஒருவர் தோன்றினார். அவருடைய பெயர் முஹம்மது. இயேசு கிறிஸ்துவுக்குப் பிறது வந்த திருவாக்கினர் என்று அவர் தம்மைக் கூறிக் கொண்டார். அவர் மிகப் பெரிய சூனியக்காரராக இருந்தார். அவருடைய பேச்சை ஒரு முறை கேட்டால் கூட போதும் மக்களை அது ஈர்த்துவிடும். தன்னுடைய மதத்துக்கு அவர் “இஸ்லாம்” என்று பெயரிட்டார். அவரை ஏற்றுக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். அவர் தன்னுடைய மதத்தை சூனியத்தாலும் வாளாலும் பரப்பினார். அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர் தன்னை ஆண்டவரின் திருத்தூதர் என்று அழைத்துக் கொண்டார். ”என்னை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெட்டப்படுவீர்கள்” என்று அவர் கொந்தளித்தார்.
தொடர்ந்து தந்தையார் கூறினார்.
”இஸ்லாம் என்பது உண்மையில் பயங்கரவாத, காட்டுமிராண்டித்தனமான, அறியாமை மிகுந்த மதம் ஆகும். முஸ்லிம்கள் அனைவரும் நாகரீகம் அற்றவர்கள். பண்பாடு தெரியாதவர்கள். ஆடம்பரமாக உல்லாசமாக வாழ்பவர்கள். பெண்களை கொடுமைப்படுத்துபவர்கள். தங்களை எதிர்ப்பவர்களை உயிரோடு கொளுத்துபவர்கள். கிறிஸ்துவ வரலாற்றாசிரியர்களும், எழுத்தாளர்களும் அவர்களைப் பற்றி இவ்வாறுதான் எழுதி வைத்துள்ளார்கள்.”
”நம்முடைய கிறிஸ்துவ மதத்திற்கு இஸ்லாமினால் பயங்கரமான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. கிறிஸ்துவ மதத்திற்கு மிகப் பெரிய எதிரிகளே முஸ்லிம்கள் தாம்!”
“அப்பா! நான் இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்“ – என்று நான் கூறினேன்.
“பீட்டர்! நீ உலகில் உள்ள எல்லா மதங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து கொள். ஆனால், இஸ்லாமைப்பற்றி ஆராயாதே. முஸ்லிம்களுக்குப் பக்கத்தில் கூடப் போகாதே! – இதுதான் என்னுடைய அட்வைஸ் – அவர்கள் சூனியக்காரர்கள், உன் மீது சூனியம் செய்துவிடுவார்கள். உன்னுடைய பெற்றோர்கள், மூதாதையரின் மதத்திலிருந்து உன்னை வெளியேற்றி விடுவார்கள்!“
என் தந்தை பேச்சை உன்னிப்பாக நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆர்வம் பன்மடங்கு அதிகரித்து விட்டது. ஏற்கனவே நான் பல மதங்களைப் பற்றியும் படித்திருந்தேன். அப்பாவுக்கே தெரியாமல் இஸ்லாத்தைப் பற்றி படித்தால் என்ன? என்று தோன்றியது. உண்மையில் என்னதான் உள்ளது? என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா? okபடித்தே தீருவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். எங்கேயிருந்து ஆரம்பிப்பது?
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமைப் பற்றி நான் படிக்கத் தொடங்கினேன். படிக்கக படிக்க ‘பகுத்தறிவுக்கும் மனவுணர்வுக்கும் வெகு பக்கத்தில் அல்லவா இஸ்லாம் உள்ளது’ என்று நான் உணரலானேன். இஸ்லாமிய வரலாற்றைப் பற்றி மேலும் மேலும் படித்த பிறகு இவ்வளவு நாள் இருட்டுக்குள் தடுமாறிக் கொண்டு இருந்திருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொண்டேன். கிறிஸ்துவ மதகுருமார்களும் எழுத்தாளர்களும் முஸ்லிம்களைப் பற்றி எழுதி வைத்திருப்பதெல்லாம் அவர்களுடைய சிந்தனைக் குளறுபடியின் விளைவு என்பதையும் தெரிந்து கொண்டேன். மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள இஸ்லாமியத் துாதர் முஹம்மதுவின் மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடிப் போனேர். கிறிஸ்துவ குருமார்கள், எழுத்தாளர்கள் சொன்னதுக்கெல்லாம் நேர் எதிரானவராக அல்லவா இவர் இருக்கிறார்? மனித குலத்தின் மீது கருணையாளராகவும், மானுட சமுதாயத்திற்கே நலம் விரும்பியாகவும் அல்லவா உள்ளார்? பெண்களுக்கு அவர் அளித்த உரிமைகளைப் போன்று அவருக்கு முன்பு யாருமே அளித்ததில்லையே?
தொடர்ந்து இஸ்லாமிய புத்தகங்களைப் படித்து வந்ததில் ஓர் இஸ்லாமிய அறிஞரைச் சந்திக்க வேண்டுமே என்று தோன்றியது. இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகமதிகம் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என்று யோசிக்கலானேன்.
ஆன்மீக மாநாடு
சத்தியத்துக்கான தேடலில் இருந்தபோது ஒருநாள் இக்பால் பார்க் (கராச்சி) பக்கமாக போய்க் கொண்டிருந்தேன். அங்கே முஸ்லிம்களின் ஏதோ ஒரு மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பைஜாமா ஜிப்பா அணிந்து கொண்டு தலைப்பாகை கட்டியவர்களாக அனைவரும் விரைந்தோடிக் கொண்டிருந்தனர். “இங்கே என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது?” என்று அவர்களில் ஒருவரிடம் விசாரித்தேன். ஆன்மீக மாநாடு நடைபெறுகின்றது! என்று அவர் பதிலளித்தார். உண்மையை அறிந்து கொள்ளும் முயற்சியில் இருந்த நான் ஆர்வத்தோடு போய் அதில் கலந்துவிட்டேன். வழிபாட்டு இடத்தில் நுழைந்து பார்த்தால் அங்கே ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இன்னோர் ஆள் கைகட்டி நின்று கொண்டு கண்களை மூடியவனாய் சொக்கிப் போய் என்னத்தையோ பாடிக் கொண்டிருந்தான். பாட்டு முடிவடைந்ததும் நீளமான தாடி வைத்திருந்த ஒருவர் உரையாற்றினார். உரையின் இறுதியில் வெகு சிரமப்பட்டு அவருக்கு அருகே சென்றேன். பக்கத்தில் போய் அவரோடு கை குலுக்கினேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “என்னுடைய பெயர் ரியாஸ் பீட்டர். நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவன். இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அது விஷயமாகத் தான் தங்களை காண வந்துள்ளேன்! “ என்று கூறினேன். அவர் மிகவும் சந்தோஷமடைந்தார். “நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா அவற்றை தாராளமாய் கேட்கலாம்” என்று கூறினார்.
”இஸ்லாம் என்பது எத்தகைய மதம்?” – நான் கேட்டேன்.
”இஸ்லாம் உண்மையான மதம்! மனித நேயம் மற்றும் சகோதரத்துவத்தையே அது கற்றுக் கொடுக்கிறது”
”முஹம்மது என்பவர் யார்?” – என் கேள்வி
”மனித வடிவில் வந்த ஒளி!”
”ஒளி என்றால்?” – என் ஐயம்.
”இறைவனே ஒளியாவான். முஹம்மது அவ்வொளியின் ஒரு பகுதியாவார்!”
”அப்படியென்றால், உங்கள் கருத்துப்படி முஹம்மது தான் இறைவன் இல்லையா?”
”அப்படி கிடையாது! அவர் கடவுள் அல்ல. கடவுளின் தூதர்தான். ஆனால் இறைவன் அவருள் தன் ஒளியைச் செலுத்தி அவரை மற்றெல்லா மனிதர்களையும் விட, இறைத்தூதர்களையும் விட புனிதமானவராக ஆக்கிவிட்டான். மனிதவடிவில் தன் ஒளியையே அனுப்பினான். மக்கள் அவரை உணர்ந்து கொண்டு சத்தியப்பாதையை, வெற்றிக்கான வழியை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக!”
”இப்போது இங்கு ஒரு ஆள் பாடிக் கொண்டிருந்தானே, என்ன பாட்டு அது?” என்று கேட்டேன்
”அவர் பாடவில்லை, அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களைப் புகழ்ந்து பாமாலை இசைத்துக் கொண்டிருந்தார்.”
அதன் பின்னர் நான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பிவந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின் எனக்கு ஒரே யோசனை. ”இதுதான் இஸ்லாமா? இஸ்லாம் என்பது இவ்வளவுதானா? அல்லது நம்மைப்போல் இவர்களும் வழிகேட்டில் உள்ளார்களா? இதுதான் இஸ்லாம் என்றால் இவர்களுக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் இல்லையேல் கிறிஸ்துவர்களான நாம் சர்ச்சுகளில் என்னவெல்லாம் பண்ணுகிறோமோ அதையே தான் இவர்கள் மஸ்ஜிதுகளில் பண்ணுகிறார்கள். கண்டிப்பாக எங்கேயோ கோளாறு உள்ளது! நாம் சர்ச்சில் இயேசு கிறிஸ்துவைப் புகழ்ந்து துதிப்பாடல்கள் பாடுகிறோம் என்றால் இவர்களும் தங்களுடைய வழிபாட்டு இடங்களில் முஹம்மதுவின் மீது பிரியம் கொண்டு பாமாலை இசைக்கிறனர். இதே போல், கிறிஸ்துவர்களின் ஒரு பிரிவினர் ஈஸாவையே ஆண்டவர் என்கிறனர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது.” ”ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால் தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.” (யோகா – 1 – 9,10) என்று பைபிளிலேயே கூறப்பட்டுள்ளதே!
இந்த முஸ்லிம்கள் முஹம்மதுவையும் இறைவனின் ஒளி என்றுதானே நினைக்கிறார்கள். அப்புறம், என்னதான் வேறுபாடு இருக்கின்றது?
என்னுடைய குழப்பங்களைப் போக்குவதற்குப் பதிலாக இந்த சந்திப்பு அவற்றை மேலும் அதிகமாக்கிவிட்டது. ”ஆண்டவரே! எனக்கு உதவுங்கள். சத்தியப்பாதைக்கு என்னை வழிநடத்துங்கள்.” என்று மனம் உருக நான் வேண்டிக் கொண்டேன்.
நான் குழம்பிப் போய் இருந்தபோதிலும், ஒரு வேளை கிறிஸ்துவ மதத்தில் நிறைய பிரிவுகள் இருப்பது போல முஸ்லிம்களிலும் பல பிரிவுகள் இருக்கக் கூடும் என்று என்னையே தேற்றிக் கொண்டேன். இஸ்லாமின் உண்மையான வடிவத்தை எனக்கு விளக்கிக் கூறுபவர்களை சந்திக்கும் வரை என்னுடைய தேடலை நிறுத்தப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். முஸ்லிம்களில் உள்ள பலப்பல பிரிவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டேன். என் பயணம் தொடர்ந்தது.
தாருல் குர்ஆன் மதரஸாவில்
சத்தியத் தேடல் என்ற பாலைவனத்தைக் கடக்கும் முயற்சியில் ஒரு நாள் மதரஸா தாருல் குர்ஆனில் நுழைந்துவிட்டேன். அங்கே ஒரு மௌலானா சாஹிப்பை சந்தித்தேன். இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதாக அவரிடம் நான் தெரிவித்தேன். ”நீங்கள் வியாழக்கிழமை வாருங்கள். நான் உங்களை ஓரிடத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறேன். செயல்வடிவில் இஸ்லாமை அங்கு நீங்கள் அறிந்து கொள்ளலாம். உண்மையான இஸ்லாமைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உண்மையான இஸ்லாமோடு உண்மையான முஸ்லிம்களையும் நீங்கள் அங்கு பார்க்கலாம். அவர்களோடு நீங்கள் மூன்று நாட்களை கழித்தீர்கள் என்றால், இஸ்லாமைப் பற்றிய சரியான விளக்கம் உங்களுக்குக் கிடைத்துவிடும்!” என்று அவர் கூறினார்.
குருடனுக்கு என்ன வேண்டும்? பார்ப்பதற்கு இரண்டு கண்கள்! நான் வியாழக்கிழமையை எதிர்பார்த்து அவரை தேடி அடைந்துவிட்டேன். அவர் என்னிடம் கூறினார். ” நீங்கள் ஒரு கிறிஸ்துவர் என்பதை அங்கு காட்டிக் கொள்ளக் கூடாது!”
அங்கே இன்னும் நிறைய மௌலவிகள் இருந்தார்கள். விரிப்பு படுக்கை இன்னும் என்னென்னவோ நிறைய சாமான்கள் ஒவ்வொருத்தரிடமும் இருந்தன. நீண்ட தூரப் பயணத்திற்கு தயாராகிறவர்கள் போல அவர்கள் காணப்பட்டார்கள். என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. ”விரிப்பு படுக்கைகளை – இந்த சாமான்களை எல்லாம் எதற்காக வைத்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டேன். ” நாங்கள் வெகு துாரம் செல்ல வேண்டியுள்ளது. அல்லாஹ்வின் தூதர் மார்க்கத்தைப் பரப்புவதற்காக வெளியூர் செல்லும் போது தேவையான சாமான்களைக் கையோடு கொண்டு செல்வார் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதுபோலவே நாங்களும் கொண்டு செல்கிறோம்” என்று பதில் கூறினார்கள்.
தப்லீக் மர்கஸில்
பெரிய பள்ளிவாசல் ஒன்றில் எங்கள் பயணம் முடிவடைந்தது. நிறைய மௌலவிகள் அங்கு இருந்தார்கள். எல்லா வயது மக்களும் இருந்தார்கள். நிறைய படுக்கைகள், பாத்திரங்கள் மற்ற மற்ற பொருட்கள் அனைத்தும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. பார்த்தவுடனேயே அது ஒரு சத்திரமாகத் (முஸாஃபர்கானா) தான் எனக்குப்பட்டது. ” இது என்ன இடம்?” என்று நான் கேட்டேன். ” இது தான் எங்கள் தப்லீக் மர்கஸ்!” பதில் கிடைத்தது. ” இங்கிருந்துதான் மக்கள் அல்லாஹ்வுடைய பாதையில் கிளம்புகிறார்கள். சிலர் மூன்று நாட்களுக்காக, சிலர் நாற்பது நாட்களுக்காக, இன்னும் சிலர் நான்கு மாதங்களுக்காக, இன்னும் சிலரோ தங்கள் முழு வாழ்க்கையையும் தப்லீக்கிற்காகவே அர்ப்பணித்து விடுகின்றனர்!”
” இவர்கள் முஸ்லிம் அல்லாதோரிடம் சென்ற தப்லீக் பண்ணுகிறார்களா?” என்று நான் கேட்டேன்.
” இல்லை! இன்று முஸ்லிம்களிடம் தான் கடுமையாக தப்லீக் செய்ய வேண்டியுள்ளது, என்று அவர்கள் கூறினர். ” இங்கே கற்றுக் கொள்வதற்காகத் தான் அனைவரும் வருகிறனர். இங்கு முஹம்மது சல்லல்லாஹு அலைஹுவசல்லம் அவர்களின் சுன்னத் (வழிமுறை) கற்றுத் தரப்படுகின்றது!”
இதற்குள்ளாக தொழுகை நேரம் வந்துவிட்டது. நான் பள்ளிவாசலுக்கு வெளியே வந்து விட்டேன். தொழுகை முடிந்த பிறகு நான் மீண்டும் பள்ளிவாசலுக்குள் சென்றேன். இப்போது பயான் (உரை) நடைபெறும் என்று மௌலவி சாஹப் சொன்னார். நானும் கவனமாக அதைக் கேட்டேன். ஆனால், உண்மையில் எனக்கு ஒன்றுமே உறைக்கவில்லை. அவ்வுரையில் எதுவொன்றுமே ஆதாரத்துடன் கூறப்படவில்லை. ஏறக்குறைய எல்லா விஷயங்களுமே பெரியார்கள் சொன்னார்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்றே அமைந்திருந்தன. பயான் முடிந்த பின்னர் அனைவரும் பள்ளிவாசலிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள். ” நாளைக்கு எங்கள் ஜமாஅத் ஆறு நாட்கள் தப்லீக் பயணத்தில் கிளம்புகின்றது. நீங்களும் கண்டிப்பாக எங்களுடன் வரவேண்டும்” என்று மௌலவி சாஹிப் கூறினார். நேரம் கிடைத்தால் வருகிறேன் என்ற பதில் அளித்தேன். மீண்டும் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.
வீடு திரும்பியதும், இதென்ன முஸ்லிம்கள் விநோதமானவர்களாக இருக்கிறார்கள்? தங்கள் ஆட்களிடமே போய் தப்லீக் பண்ணுகிறார்கள் என்ற நினைப்பே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. உலகில் உள்ள மற்ற மதத்தினர் எல்லாம் பிறமதத்தார்களிடம் சென்றல்லவா பிரச்சாரம் செய்கிறார்கள்? இரண்டாவது அங்கு பேசப்படுகிற விஷயங்கள் எல்லாமே பெரியார்களை மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மூலமாகத்தான் வந்ததோ என்னமோ? காதால் கேட்ட விஷயங்களை மட்டுமே பின்பற்றி நடப்பதென்பது மிகப்பெரிய அறியாமை ஆகிவிடாதா? இந்த மக்கள் மூடத்தனத்தில் மூழ்கிப்போயுள்ளார்கள். காதால் கேட்ட விஷயங்களை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார்கள், என்று நானாக ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். முதலில் ஆராய்ச்சி செய்து பிறகு செயல்படுவதற்கு, ஆண்டவர் இவர்கள் மேல் அருள் புரியட்டும்! ஆராய்ச்சி செய்யாவிட்டால் கண்டிப்பாக தவறுகள் நிகழும், நஷ்டமடைய வேண்டியிருக்கும். கிறிஸ்துவ மதத்திலும் மெஷினரி வேலைகள் நடைபெறத்தான் செய்கின்றன. முதலில் அவர்கள் பல நிறுவனங்கள், பாடசாலைகளில் கிறிஸ்துவத்தை கற்றுத் தருகிறார்கள். பிறகு தப்லீக் செய்வதற்கான பயிற்சியைக் கொடுக்கிறார்கள். அதற்கு அப்புறம் தான் கிறிஸ்துவர் அல்லாதவர்களிடம் போய் பிரச்சாரப் பணி செய்யப்படுகின்றது.
இஸ்லாமை ஆராயத் தொடங்கியதில் இருந்தே நான் ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கிறேன். இஸ்லாமில் ஒரு வகையான ஈர்ப்பு விசை உள்ளது. எல்லா மனிதர்களையும் அது தன்பால் இழுத்துக் கொள்கின்றது. ‘சூனியம்’ என்றெல்லாம் சொல்லி என்னை பயமுறுத்தினார்களே, அது இதுவாகத்தான் இருக்கும்.
நான் இஸ்லாமைப் பற்றி எந்தளவு படித்துக் கொண்டேயிருந்தேனோ அதே அளவு என்னுடைய ஆராய்ச்சியும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இதற்கிடையில், மெஷினரி காரியமாக நான் ராவல்பிண்டி வரை போக வேண்டியிருந்தது. பிண்டியில் ஓர் இஸ்லாமிக் சென்டர் இருந்தது. நான் அங்கு சென்றேன். ஒரு போராசிரியரோடு சந்திப்பு நிகழ்ந்தது. அவர் எனக்கு அஹ்மது ரழாகான் பரேலவி என்பவருடைய புத்தகங்களை அளித்தார். ”இவர் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர்!” என்றும் கூறினார். நான் நன்றியோடு பெற்றுக் கொண்டேன். வாசிப்பதைத் தொடங்கினேன். இந்தப் புத்தகங்கள் எதுவுமே என்னுடைய தாகத்தைத் தீர்ப்பதாக இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது. நூலாசிரியர் தன்னைத் தானே பெருமையாய் உயர்த்திக் காட்ட முயற்சி செய்திருந்தார். இரண்டாவது இந்த நூற்களிலும் முஹம்மதுவை – ஏற்கனவே நான் சொல்லியிருந்தது போல ‘ஒளி’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
திக்ரு மஜ்லிஸ் – தியான சபைகளில்
என்னுடைய தேடலின் அடுத்த கட்டமாக தியானசபையும் அமைந்தது. நடந்த கதை என்னவென்றால், ஒரு நாள் மாலைப் பொழுதில் ராவல்பிண்டி நகரில் உலா வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒரு பள்ளிவாசலிலிருந்து உரத்த குரல்கள் வந்து கொண்டிருந்தன. பள்ளிவாசலுக்குள் நுழைந்து விட்டேன். உள்ளே பார்த்தால் கொஞ்சம் பேர் கண்களை மூடிக்கொண்டு சப்தமாக ”அல்லாஹூ” ” அல்லாஹூ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கே நின்றிருந்த ஓர் ஆளிடம் போய் ‘இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?’ என்று விசாரித்தேன். ‘இவர்கள் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்து கொண்டுள்ளார்கள்!’ என்று அவர் தெரிவித்தார். கொஞ்ச நேரத்தில் அவர்களுடைய தியானம் முடிந்துவிட்டது. அவர்களுக்குப் பக்கத்தில் சென்று, ‘நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ என்று விசாரிக்கலானேன்.
” நாங்கள் இறைவனை திக்ரு செய்து கொண்டிருந்தோம். நீங்கள் அதிகம் அதிகம் அல்லாஹ்வை தியானித்து வாருங்கள். உங்கள் இதயத் துடிப்போடு அல்லாஹு என்ற சப்தம் வர வேண்டும்” என்று எங்களுடைய குருநாதர் (முர்ஷித்) கூறியுள்ளார்”
” உங்களுடைய குருநாதருடைய பெயர் என்ன? அவரை எங்கு சந்திக்கலாம்?” என்று கேட்டேன்.
” எங்களுடைய ப்பீர் (குருநாதர்) உடைய பெயர் கோஹர் ஷாஹி, அவர் ‘சிந்து’வில் உள்ளார்.”
” நான் ஒரு கிறிஸ்துவன். இஸ்லாத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டுள்ளேன்!” – இதைக் கேட்டதுமே அவர்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். தங்களுடைய முர்ஷிதைக் கண்டிப்பாக போய் சந்திக்க வேண்டும். சிந்துவில் உள்ள அவருடைய ஆன்மீக மையத்துக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்கள். அங்கு நான் இஸ்லாமைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்றம் கூறினார்கள்.
கோஹர் ஷாஹி! இந்தப் பெயரை எங்கோ கேட்டது போல், பரிச்சயமான பெயராக உள்ளதே என்று யோசித்து யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஞாபகத்திற்கே வரவில்லை. சரி, சிந்துவுக்குப் போய் சந்தித்தே விடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.
அன்றைய தினம் ராவல்பிண்டி சர்ச்சில் ‘இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்’ என்கிற தலைப்பில் நான் உரையாற்றுவதாக இருந்தது. நான் ஓர் ஆக்ரோஷமான, உணர்ச்சிகளைச் சுண்டியெழுப்ப வல்ல ஒரு பேச்சாளனாக இருந்தேன். ஆனால், அன்றைய தினம் என்னுடைய பேச்சு எடுப்பானதாக இல்லை. வார்த்தைகள் எல்லாம் தேய்ந்து போய் வெளிவந்தன. ‘நாம் பேசுவதும் செயல்படுவதும் உண்மையை விட்டும் எங்கோ வெகு தொலைவில் உள்ளது, என்கிற எண்ணமே என் மனமெங்கும் வியாபித்திருந்தது. நான் மனமே இல்லாமல் பேசிக் கொண்டுள்ளேன். என் உணர்வுகள் எல்லாம் வடிந்து போயுள்ளன என்பதை குழுமியிருந்தவர்கள் அனைவருமே விளங்கிக் கொண்டார்கள். ‘பீட்டர்! உங்களுக்கு என்ன ஆனது? உடல் நிலை இன்றைக்கு சரியில்லையா?’ என்று அந்த சர்ச்சின் பாதிரியாரும் விசாரித்தார். ‘இல்லை, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்று மறுத்துவிட்டேன்.
மறுநாள் நான் கிளம்புவதாக இருந்தது. மெஷினரியைச் சேர்ந்தவர்களும், ராவல்பிண்டி பாதிரியாரும் என்னை வழியனுப்புவதற்காக ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். மலர்களையும், அன்பளிப்புகளையும் ஏராளமாக வழங்கினர். அவை அனைத்தையும் வந்திருந்த கிறிஸ்துவக் குழந்தைகளுக்கே பங்கிட்டுவிட்டேன். கராச்சிக்கு போகும் டிரெயினில் ஏறிக் கொண்டேன்.
ஆன்மீக மையத்தில்
கராச்சிக்கு போகும் வழியில் கோட்டரி (சிந்து)யில் இறங்கி விட்டேன். ஆன்மீக மையத்துக்குப் போய் கோஹர் ஷாஹி குருநாதரை சந்திக்க வேண்டுமல்லவா? யாராக இருக்கும்? எங்கேயோ கேள்விப்பட்டது போலுள்ளதே? என்று என் சிந்தனை சுழன்று கொண்டேயிருந்தது. ஆனால் ஞாபகம் தான் வரவேயில்லை. ஆன்மீக மையம் எங்கேயுள்ளது என்று மக்களிடம் விசாரித்தேன். மக்கள் மையமிருக்கும் திசையை சுட்டிக் காட்டினார். ‘அதோ! பெரிதாய் ஒரு கொடிக்கம்பம் நிற்கின்றதே, இதுதான் ஆன்மீக மையம்!’ மக்கள் என்னை மேலும் கீழுமாய் விநோதமாய் பார்க்கலாயினர். பாதிரியார் உடையை அணிந்து கொண்டு யார் இவர் ஆன்மீக மையத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்?
ஆன்மீக மையத்தை அடைந்து ஷாஹியைச் சந்திக்க வந்திருப்பதைத் தெரிவித்தேன். என்னை ஓர் அறையில் அமர வைத்தனர். சற்று நேரம் கழித்து பெரியவரைத் தரிசிப்பதற்காக வேறொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். ஹால் போன்ற பெரிய அறை அது. நிறைய பேர் அங்கே பணிவுடன் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு மனிதர் பலகையின் மீது வீற்றிருந்தார். அவர் யாரென்று பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. ரியாஸ் கோஹர் ஷாஹி! என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர். இரண்டு முறை எங்கள் சர்ச்சுக்கும் வருகை தந்து கௌரவப்படுத்தியுள்ளார். அவரை இந்த இடத்தில் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனேன். மிஸ்டர் கோஹர் ஷாஹி முஸ்லிம்களுடைய ஆன்மீக குருநாதரா?
என்னைப் பார்த்ததும் அவர் மார்புற தழுவிக் கொண்டார். ‘பீட்டர்! எப்படி இங்கு வர முடிந்தது?’ என்று விசாரித்தார். ‘ராவல்பிண்டியிலிருந்து கராச்சிக்கு போய்க் கொண்டிருந்தேன். வழியில் உங்களையும் சந்தித்து விட்டுப் போனால் என்ன தோன்றியது’ நான் எதற்காக வந்துள்ளேன் என்பது இவர் மூலமாக என் அப்பாவுக்குத் தெரிந்துவிடக் கூடாதே என்று எனக்கு பயமாக இருந்தது. நான் இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பது என் அப்பாவுக்கு அடியோடு தெரியாதல்லவா?
அங்கே உட்கார்ந்திருந்தவர்களிடம் அவர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். இங்கே இன்னொன்றையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். கோஹர் ஷாஹி ஒரு முஸ்லிம் என்பதே எனக்குத் தெரியாது. 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் எங்களுடைய சர்ச்சில் உரையாற்றினார். ‘நான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கனவில் கண்டுள்ளேன்.’ ‘என்னைப் பின்பற்றுகின்ற மக்கள் உண்மையான மதத்தில் உள்ளார்கள் என்கிற நற்செய்தியை அவர்களிடம் அறிவித்துவிடுங்கள்’ என்று கனவில் என்னிடம் ஈஸா தெரிவித்தார்’ – இதுதான் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம்!
நான் இந்நூலின் மூலம் அவரை விவாதமேடைக்கோ, முபாஹலாவிற்கோ அழைக்கவில்லை. ஆனால் உண்மையை வெட்டவெளிச்சமாக்காவிட்டால் நான் பாவியாகி விடுவேன். எண்ணற்ற முஸ்லிம் சகோதரர்கள் வழிகேட்டில் போய் விழுவதைத் தடுப்பதற்காகவும் நான் இதைக் கூறியே ஆக வேண்டியுள்ளது.
கோஹர் ஷாஹியிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்பது தவறே அல்ல என்று நினைக்கிறேன்.
(அ) முஸ்லிம் அமைப்புகளுக்குப் பதிலாக கிறிஸ்துவ அமைப்புகளே உங்களை உரையாற்ற ஏன் அழைக்கின்றன?
(ஆ) வெளிநாட்டு சர்ச்சுகளில் உரையாற்றுவதற்காக கிறிஸ்துவர்களின் மிகப் பெரிய மெஷினரியான Church of England உங்களை தனது செலவில் அழைக்கின்றதே, என்ன காரணம்?
(இ) இஸ்லாமைப் பிரச்சாரம் பண்ணுவதற்காகத்தான் மிஸ்டர் கோஹர் ஷாஹி சர்ச்சுகளுக்கும் போகின்றார் என்றால், இதுவரை எத்தனை கிறிஸ்துவர்கள் இஸ்லாமைத் தழுவியுள்ளனர்?
(ஈ) அவருடைய சித்திரம் நிலவிலும் ஹஜர் அஸ்வத்திலும் பதிந்துள்ளது என்று அவர் வாதிடுகிறாரே, அதற்கு என்ன பொருள்? கிறிஸ்துவ Media மட்டுமே இதைப் பரப்பிக் கொண்டிருக்கின்றதே, எந்த முஸ்லிம் நாடும் இதை உண்மை படுத்துவதில்லையே, ஏன்? ஹஜரே அஸ்வதை முஸ்லிம்கள் மட்டும் தானே போய்ப் பார்க்க முடியும்? அக்கல்லில் அவருடைய உருவத் தோற்றத்தை காணமுடியாத அளவுக்கென்ன முஸ்லிம்கள் பார்வையற்றவர்களா?
(உ) கிறிஸ்துவ பிரச்சார இயந்திரத்தைப் பயன்படுத்தி இஸ்லாமை அசத்தியம் என்று நிரூபிக்கும் நோக்கில் அவரை, “பொய்யான நபி”யாக சித்தரிக்கும் சதி வேலைகள் நடைபெறுகின்றதோ, என்னமோ? அதன் மூலம், இயேசு கிறிஸ்து முன் மொழிந்து விட்டுப் போன எதிர்பார்க்கப்பட்ட நபி கோஹர் ஷாஹிதான், இவரைத்தான் ஈஸா போய் அனுப்பி வைத்துள்ளார் என்று நிரூபிக்க முயலுகின்றனரோ? எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மது தான் என்ற அசைக்கமுடியாத உண்மையை அசைத்துப் பார்க்கவும் குட்டையைக் கலக்கவும் முயல்கின்றனரோ?’
நான் என் அனுபவத்தில் சொல்கின்றேன். கோஹர் ஷாஹி என்பவர் முஸ்லிம்களிடையே நுழைந்துவிட்ட மிஷினரிகளின் ஏஜண்ட் ஆவார். நுழைநரி! எதிர்காலத்தில் அவரைப் பயன்படுத்தி மெஷினரிகள் பெரிய வேலைகளை முடித்துக் கொள்ளும்.
சுருக்கமாக நடந்ததைக் கூறி முடிப்போம். நான் ஒரு நாள் மட்டுமே ஆன்மீக மையத்தில் தங்கியிருந்தேன். ஒரு வி. ஐ. பியைப் போல கவனித்துக் கொள்ளப்பட்டேன். எல்லாவகையான உபசரிப்புகளும் கிடைத்தன. இரண்டாவது நாளே அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
சரியான இஸ்லாமை முறையாக விளக்கவல்ல ஓர் இஸ்லாமிய அறிஞரை நான் இன்னும் சந்திக்கவே இல்லை. இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் நான் புத்தகங்களின் துணையையே நாட வேண்டியிருந்தது. நல்லபடியாக இஸ்லாமை விளக்கவல்ல ஒரு முஸ்லிம் அறிஞரை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் மட்டும் வளர்ந்து கொண்டே போனது. இஸ்லாமில் நிறைய பிரிவுகள் உள்ளன என்பதை இதுவரை ஆராய்ந்ததில் தெரிந்து கொண்டேன். ஆனால் யாரிடம் உண்மையான இஸ்லாம் உள்ளது? என்பது தான் இன்னும் புலப்படவே இல்லை. கண்டறியும் அளவுக்கு என்னிடம் அறிவு இல்லை. இதுவரை நான் சிந்தித்த பிரிவுகளில் எந்த ஒன்றும் சரியான ஆதாரங்களின் வாயிலாக தன்னை சரியென்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. சத்தியத்தை தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் பல்வேறு அறிஞர்களையும் சந்தித்துக் கொண்டே இருந்தேன். பலதரப்பட்ட அமைப்புகளின் படிகளை ஏறி ஏறி இறங்கினேன். இதுவரை போன இடங்களில் எல்லாம் தனிநபர் வழிபாடுதான் அப்பட்டமாக நடந்து கொண்டிருந்தது. பாலைவனத்தைக் கடக்கும் என் முயற்சி மலையை அளக்கும் முயற்சியாக நீண்டு கொண்டிருந்தது.
ஜாமீஆ பநூரிய்யாவில்
ஜாமீஆ பநூரிய்யாவுக்கு ஒருநாள் போய்ச் சேர்ந்தேன். அங்கே ஒரு முஃப்தி ஸாஹியோடு என் சந்திப்பு நிகழ்ந்தது. அவரிடமிருந்து நிறைய விஷயங்களைப் பெற்றுக் கொண்டேன். பேசிக் கொண்டிருக்கையில் டீ வரவழைக்கப்பட்டது. தூய்மையான அருமையான குவளையில் அனைவருக்கும் டீ வழங்கப்பட்டது. ஆனால், எனக்கோ ஒரு படுமோசமான வீசி எறியத்தக்க ஒரு கப்பில் வழங்கப்பட்டது ‘நான் டீ குடிப்பதில்லை’ என்று கூறி நன்றியுடன் நாசூக்காக அதை மறுத்துவிட்டேன். என்னால் இதைப்பற்றி கேட்காமல் இருக்க முடியவில்லை. “முஃப்தி அவர்களே! வேதம் வழங்கப்பட்டவர்களோடு உண்ணவும் பருகவும் இஸ்லாம் தடை செய்துள்ளதா?“ என்று கேட்டேன். “இஸ்லாமில் வேதம் வழங்கப்பட்ட மக்களுடன் உண்ணவும் பருகவும் அப்படியொன்றும் தடை இல்லை. ஆனால் தனி பிளேட்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளை உள்ளது“ என்றார் அவர். என்னால் வாளாயிருக்க முடியவில்லை. “எனக்குத் தெரிந்த வரைக்கும் இஸ்லாம் அன்பின், பெருந்தன்மையின் மார்க்கம்ஸ கருப்பர், வெள்ளையர் என்ற வேற்றுமைகளை அது அழிக்கின்றது. ஏழை, பணக்காரன், மேல் ஜாதி, தாழ்த்தப்பட்டவன் என்ற பாகுபாடுகளை அது ஒழித்துவிடுகின்றது. ஆனால், மற்ற மதத்தில் கீழ் ஜாதி மக்களோடு நடந்து கொள்வதைப் போன்று எனக்கு இத்தகைய ஒரு கப்பில் நீங்கள் டீ தருகின்றீர்கள். அதுமட்டுமல்ல, வந்தது முதல் இந்த நிமிடம் வரை நீங்கள் என்னோடு கைகுலுக்கக் கூட இல்லை!“
இதைக்கேட்டது தான் தாமதம் முஃப்தி ஸாஹிப் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். “இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக நீங்கள் இங்கே வந்துள்ளீர்களா? அல்லது எங்களோடு வாக்குவாதம் பண்ணுவதற்காக வந்துள்ளீர்களா?“ என்ற கடும் கோபத்துடன் கூறினார். “தயவு செய்து வெளியே போய் விடுங்கள்!“
இந்த சம்பவம் என் மனதில் ஆழமான காயத்தை உண்டு பண்ணிவிட்டது. மனம் வெறுத்து, பேசாமல் பழைய வாழ்க்கைக்கே திரும்பப் போய் இருப்பேன். ஆனால், என்னுடைய அல்லாஹ் என்னை தற்காத்துக் கொண்டான். என்னுடைய உள்ளத்தில் இஸ்லாமின் மீதான காதலை இன்னும் வளரச் செய்தான். என்னுடைய ஆராய்ச்சி இன்னும் கொஞ்சம் அதிகமானது.
Filed under: Uncategorized |
மறுமொழியொன்றை இடுங்கள்